டெல்லி சுல்தான்கள் துக்ளக் வம்சம் : துக்ளக் வம்சத்தின் தோற்றம், சிறந்த அரசர்கள் மற்றும் துக்ளக் வம்ச வீழ்ச்சிக்கான காரணங்கள்

டெல்லி சுல்தான்கள் துக்ளக் வம்சம் (கி.பி 1320 - 1414) 

பொருளடக்கம்:   

  • கியாசுதீன் துக்ளக் கி.பி 1320 - 1325
  • முகமது - பின்- துக்ளக் கி.பி 1325 - 1351 
  • பெரோஸ் - ஷா- துக்ளக் கி.பி 1351 - 1388
  • துக்ளக் வம்ச வீழ்ச்சிக்கான காரணங்கள்                

Delhi Sultans : Tughlaq Dynasty

கியாசுதீன் துக்ளக் கி.பி   1320 - 1325 

  • அலாவுதீனின் இறப்பை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக டெல்லி சுல்தானியம் பல பகுதிகளை இழக்க நேரிட்டது. அவற்றை மீட்பதே கியாசுதீனுக்கு பெரும் பணியாக அமைந்தது.
  • கியாசுதீன் பிரபுக்கள் வகுப்பினருடனும் சமரச கொள்கையை பின்பற்றினார்.
  • தனது மகன் ஜனாகானை வாரங்காலுக்கு எதிராக போரிட அனுப்பி வைத்தார். ஜனாகான் வராங்கல் அரசர் பிரதாப ருத்ரனை வெற்றி கொண்டு பெருஞ்செல்வத்துடன் திரும்பினார்.
  • இச்செல்வத்தைக் கொண்டே கியாசுதீன் டெல்லிக்கு அருகே துக்ளகாபாத்   என்னும் புதிய நகரை நிர்ணயம் செய்ய அடிக்கல் நாட்டினார்.
  • ஜனாகான் தனது தந்தையைக் கொன்று ஆட்சியை கைப்பற்றினார்.
  • கி.பி 1325 ல் ஜனாகான் முகமது -பின்- துக்ளக் என்னும் பெயரோடு அரியணை ஏறினார்.


முகமது - பின்- துக்ளக் கி.பி 1325 - 1351 


முகமது பின் துக்ளக் கற்றவர் , நற்பண்பு நிறைந்தவர். ஆனாலும் , குரூரம் நிறைந்தவர். டெல்லிக்கு அருகே மீரட் வரையிலும் அணிவகுத்து வந்த மங்கோலியப் படையை முகமது பின் துக்ளக் பின்வாங்க செய்தார். ஆனால் அலாவுதீன் போல் தமது திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் மன உறுதி முகமதுக்கு இல்லை.


தலைநகர் மாற்றம் 

  • டெல்லியில் இருந்து தென்னிந்தியாவில் தமது கட்டுப்பாட்டை செலுத்துவது கடினம் என எண்ணி தனது தலைநகரை டெல்லியில் இருந்து தௌலதாபாத்துக்கு மாற்றினார். (தௌலளதாபாத் - தேவகிரி) 
  • தனது திட்டம் தவறானது என உணர்ந்ததால் மீண்டும் டெல்லிக்கு தலைநகரை மாற்றினார்.
  • சுல்தானுடன் டெல்லி திரும்பிய மொராக்கோ  நாட்டு பயணி இபன் பதூதா , "காலியாக கைவிடப்பட்டதாக ஆனால் குறைந்த மக்களுடன் இருந்தது".  எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • டெல்லியில் இருந்து தௌலதாபாத் செல்ல 40 நாட்கள் நடந்தே செல்ல வேண்டும். பெரும்பாலான மக்கள் தௌலதாபாத் புறப்பட்டு சென்றனர். சிலர் ஒளிந்து கொண்டனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுகையில் ஒருவர் பார்வையற்றவராக இருந்த போதும் மற்றொருவர் பக்கவாத நோயாளியாக இருந்த போதும் கொடூரமான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். எட்டு அல்லது பத்து மைல் அளவு பரவியிருந்த அந்நகரை பற்றி ஒரு வரலாற்று அறிஞர், "அனைத்தும் அழிக்கப்பட்டன. நகரத்தின் அரண்மனைகளில் , கட்டடங்களில், புறநகர் பகுதிகளில் என எங்கும் ஒரு நாயோ , பூனையும் கூட விட்டு வைக்கப்படவில்லை எனும் அளவுக்கு முழுமையாக பாழானது"  எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடையாள நாணயங்கள்


Muhammad bin Tughlaq's Token Coins

  • முகமது பின் துக்ளக் வெள்ளி நாணயங்களுக்கு மாற்றாக செப்பு நாணயங்களை அடையாள பணமாக வெளியிட்டார். 
  • இந்த நாணய முறை ஏற்கனவே சீனாவிலும் , ஈரானிலும் நடைமுறையில் இருந்தது.
  • இந்தியாவில் நாணயங்களின் மதிப்பு அதிலிருந்து வெள்ளி உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
  • இதனால் வெண்கல நாணயங்களை போலியாக அடிப்பது எளிதாக இருந்தது.
  • வெண்கல நாணயங்களை திரும்ப பெற வேண்டிய அளவுக்கு புதிய நாணயங்கள் மதிப்பிழக்கத் தொடங்கின.
  • அரசாங்கம் மீண்டும் வெள்ளிநாணயங்களை வெளியிட்டு அதை ஈடு செய்ய வேண்டியதாயிற்று. இதனால் அரசு திவால் ஆனது.

சுல்தானின் புதுமை நடவடிக்கைகள்

  • தோ ஆப் பகுதியில் நிலவரியை உயர்த்தினார். இந்நடவடிக்கை அப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டிருந்த நேரத்தில் எடுக்கப்பட்டது.
  • இதனால் விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவ்வாறு கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இதனால் விவசாயிகள் வேளாண்மையை கைவிட்டனர்.இக்காரணத்தால் அடிக்கடி பஞ்சங்கள் ஏற்பட்டது.
  • வேளாண்மையை கவனித்துக் கொள்ள ஒரு தனி துறையை (திவான்- இ- அமீர்கோஹி) சுல்தான் ஏற்படுத்தினார். 
  • கால்நடைகளையும் விதைகளையும் வாங்க , கிணறுகள் வெட்ட விவசாயிகளுக்கு கடன் ( தக்காலிக்) தரப்பட்டது. ஆனாலும் இத்திட்டம் பயன் தரவில்லை.
  • பயிர்களை கண்காணிக்க பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் திறம்பட செயல்படவில்லை.
  • சுல்தானின் எதேச்சதிகாரப்  போக்கு அவருக்கு நிறைய எதிரிகளைச் சம்பாதித்துக் கொடுத்தது.
  • தொலைவில் உள்ள பகுதிகளை நிர்வகிக்க முடியாது என எண்ணிய அலாவுதீன் அவற்றின் மீது தமது மேலாண்மையை மட்டுமே செலுத்தினார்.ஆனால் முகமது பின் துக்ளக் தான் வென்ற அனைத்து பகுதிகளையும் இணைத்துக் கொண்டார். அதனால் , தனது இறுதி காலத்தில் அடுத்தடுத்து கிளர்ச்சிகளை சந்தித்தார்.
  • வங்கம், மதுரை, வாரங்கல்,  ஆவாத், குஜராத், சிந்து ஆகிய தொலைதூரப் பகுதிகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக கிளர்ந்து எழுந்தன.கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடுவதிலேயே முகமது தமது கடைசி நாட்களை கழித்தார்.
  • குஜராத்தில் ஒரு கிளர்ச்சியாளரை விரட்டி செல்லும் போது உடல் நலம் கெட்டு தனது 26 ஆவது ஆட்சி ஆண்டின் (மார்ச் 23,1351 ) முடிவில் முகமது பின் துக்ளக் இறந்தார்.
  • முகமது பின் துக்ளக்கிடம் முன்னர் படைவீரராக பணியாற்றிய பாமினி என்பார், தௌலதாபாத்தையும் அதைச் சுற்றி கைப்பற்றிய பகுதிகளையும் சுதந்திர அரசாக (பாமினி சுல்தானியம்) அறிவித்தார்.
  • கிபி 134 இல் மதுரை தனி சுல்தானியமாக உருவானது.
  • 1346 இல் வங்காளம் சுதந்திர அரசானது .
  • முகமது பின் துக்ளகின் சமகால எழுத்தாளர்கள் ஈசாமி,பரானி, இபன் பதுதா  ஆகியோர்.

முகமது பின் துக்ளக்கை,                                      "முரண்பாடுகளின் மொத்த உருவம்"                                                                                                               -பராணி

பெரோஸ் - ஷா- துக்ளக் கி.பி 1351 - 1388

  • பெரோஸின் தந்தை ரஜப், கியாசுதீன் துக்ளத்தின் தம்பி ஆவார். இருவருமே அலாவுதீனின் ஆட்சி காலத்தில் குரசனிலிருந்து வந்தவர்கள். ரஜப் ஒரு ஜாட் இளவரசியை மணந்திருந்தார்.
  • பெரோஸுக்கு ஏழு வயதானபோது அவர் இறந்து விட்டார்.
  • கியாசுதீனின் ஆட்சிக் காலத்தில் பெரோஸை 12 ஆயிரம் குதிரை வீரர்கள் கொண்ட சிறப்பு படைக்கு தளபதியாக்கினார்.
  • பின்னர் சுல்தானியத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் பொறுப்பும் பெரோஸிடம் கொடுக்கப்பட்டது.
  • முகமது பின் துக்ளக் தனது வாரிசை அறிவிக்காமல் இறந்திருந்தார். முகமது பின் துக்ளக்கின் சகோதரி தனது மகனுக்கு ஆட்சி உரிமை கூறியதை பிரபுக்கள் ஆதரிக்கவில்லை.
  • முகமதுவின் வாழ்நாள் நண்பர் கான்-இ-ஜகான் பரிந்துரைத்த முகமதுவின் மகன் ஒரு குழந்தையாக இருந்தார்.
  • எனவே பெரோஸ் ஆட்சியில் அமர்ந்தார்.
  • பெரோஸ் ஷா துக்ளகிடம் ஒரு உயர் அதிகாரியாக இருந்த புகழ்பெற்ற கான்-இ-ஜகான் இஸ்லாமுக்கு மாறிய ஒரு பிராமணர். இவரது இயற்பெயர் கண்ணு. இவர் வராங்கல் (தற்போதைய தெலுங்கானா) படையெடுப்பின் போது சிறைபிடிக்கப்பட்டவர்.

பிரபுக்களுடன் சமரச கொள்கை 

  • பிரபுக்கள் வர்த்தகத்தினரிடமும் , மதத் தலைவர்களிடமும் பெரோஸ் ஷா துக்ளக் சமரசக் கொள்கையை கடைப்பிடித்தார் 
  • அலாவுதீனின் ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட அவர்களது சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
  • அலாவுதீன் ஆதரிக்காத பரம்பரையாக அலுவலர்களை பணியமர்த்தும் முறையை பெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
  • அரசாங்க அலுவலர்களின் ஊதியத்தை அதிகப்படுத்தினார்.
  • அடிமைகள் மீது பெரோஸுக்கு அக்கறை இருந்தது. அவர்களது நலன்களை கவனிக்க ஒரு அரசு துறையை ஏற்படுத்தினார். 1, 80,000 அடிமைகளின் நல்வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை அக்கறை செலுத்தியது. இதில் 12000 கைவினைஞர்களாக பணிபுரிந்தனர்.
  • கான் ஜஹான் மக்பூல் 2000-க்கும் அதிகமான பெண் அடிமைகளை வைத்திருந்தார்.

போர்கள் வேண்டாம் என்ற பெரோஸின் கொள்கை 

  • இவரது ஆட்சிக்காலத்தில் இரண்டு மங்கோலிய தாக்குதல்களை நிகழ்ந்தன அவ்விரண்டுமே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
  • ஒரே பெரிய இராணுவ படையெடுப்பானது கி.பி 1362 -ல் சிந்துவின் மீது தொடுக்கப்பட்டதாகும். எதிரிகளை வழியிலேயே நிலைகுலைய வைத்து பெரோஸ் வெற்றி பெற்றார்.

பெரோஸின் மத கொள்கை 

  • வைதீக இஸ்லாமுக்கு ஆதரவளித்தார்.
  • மதத் தலைவர்களை நிறைவுறச் செய்ய தமது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தார்.
  • மதவிரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்.
  • இஸ்லாமிய விரோத நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன.
  • இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு ஜிஸியா வரியை விதித்தார்.
  • புதிய இந்து கோயில்கள் கட்டுவதை பெரோஸ் தடை செய்யவில்லை.
  •  இஸ்லாமியர் அல்லாதார் உள்பட கற்றறிந்தவர்களை மனத்தடை இன்றி ஆதரித்தார்.

ஜிஸியா வரி : இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது இவ்வரியை விதித்தவர் குத்புதீன் ஐபக் . பதினாறாம் நூற்றாண்டில் அக்பர் இவ்வரியை ஒழித்தார். 17-ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப் இவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.


  • முஸ்லிம்களுக்கு உதவ அறக்கட்டளைகளை நிறுவினார் .
  • கல்லூரிகள், மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றை கட்டினார் .
  • மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்தார்.
  • இஸ்லாமிய சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார்.

பொதுப்பணிகள் 

  • பல பாசனத் திட்டங்களை பெரோஸ் மேற்கொண்டார்.
  • சட்லெஜ் நதியிலிருந்து ஹன்சிக்கு வெட்டிய கால்வாயும், யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப் பணியை காட்டுகின்றன.
  • 1200 புதிய தோட்டங்களை உருவாக்கினார். அலாவுதீனின் முப்பது பழைய தோட்டங்களையும் புனரமைத்தார்.
  • பிரோஷாபாத், ஜான்பூர் , ஹிசார் , பிரோஸ்பூர் ஆகிய புதிய நகரங்களையும் நிர்மாணித்தார்.
  • இவருடைய மகன் முகமது கான் தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்.
  • கி.பி 1388ல் பெரோஸ் ஷா துக்ளக் இறந்தார்.

துக்ளக் வம்ச வீழ்ச்சிக்கான காரணங்கள் 

  • கி.பி 1388ல் பெரோஸ் இறந்தபோது சுல்தானுக்கும் உயர்குடியினருக்குமான பூசல்கள் மீண்டும் தலை எடுத்தன .
  • பெரோஸ் உருவாக்கிய அடிமைகளின் கிளர்ச்சியை அவருக்கு பின்வந்த ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று .
  • அடுத்த சில ஆண்டுகளில் டெல்லி சுல்தானியம் சிதைந்தது மாளவம் குஜராத் போன்ற மாகாணங்கள் விடுதலையை அறிவித்துக் கொண்டன .
  • கி.பி 1398 ஆம் ஆண்டு நடைபெற்ற தைமூரின் படையெடுப்பு நிலைமையை மேலும் மோசமாகியது . மூன்று நாட்கள் டெல்லியை சூரையாடிய தைமூர் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று ஏராளமான செல்வத்தை கொள்ளையடித்துச் சென்றார் .தைமூரின் படையெடுப்பு துக்ளக் வம்ச ஆட்சிக்கு பேரிடியாக இருந்தது. தைமூர் இந்தியாவை விட்டு செல்லும் முன் கிசிர்கான் என்பவரை முல்தானின் ஆளுநராக நியமித்திருந்தார்.
  • கி.பி 1414 ல் கிசிர்கான் டெல்லியை கைப்பற்றி சையது மரபை தோற்றுவித்தார்.


தைமூரின் படையெடுப்பு: பெரோஷா துக்ளக் இறந்து பத்து ஆண்டுகள் கழித்து தாமர்லைன் என்றழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கி சூறையாடி மாபெரும் மனித படுகொலையை அரங்கேற்றினார். கடைசி துக்ளக் அரசர் நசுருதீன் முகமது ஷா 1394 1412 ஆட்சி காலத்தில் தான் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. தைமூர் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மங்கோலிய அரசர். இவர் செங்கிஸ்கான் உடன் ரத்த உறவு இருப்பதாக கூறப்படும் துருக்கியர். மத்திய ஆசியாவில் சாமர்க்கண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தவர். தைமூரின் படையெடுப்பின் போது டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்குள்ளாகிய பகுதி பஞ்சாப் ஆகும். கொல்லர், தச்சர் ,கல்தச்சர் போன்ற இந்திய கைவினைஞர்களை சிறைபிடித்து சென்றார். சாமர்க்கண்ட்டில் கட்டிடங்களை எழுப்புவதில் அவர்களை ஈடுபடுத்தினார்

Resources :

  • Tamil Nadu Government Samacheer School Books from 6th standard to 12th standard.

Image Attribution:



No comments:

Post a Comment